Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: தீர்வு யார் கையில்?

                   
                                         
சட்டங்கள் போட்டும், தண்டனைகளைத் தீவிரப்படுத்தியும்கூடக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடாக இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில் பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப் பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக் குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மை.
சட்டம் என்ன சொல்கிறது?
இருந்தால்தானே குற்றங்கள் குறித்து புகார் செய்யவோ, தண்டனை வாங்கித்தரவோ முடியும். அதனால் பாக்ஸோ சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வோம். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகள் என்று கூறுகிறது இந்தச் சட்டம். மன வளர்ச்சி குன்றிய குழந்தை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் ஆசிரியர், மருத்துவர், குடும்பத்தினர் போன்ற நம்பிக்கைக்குரியவர்களின் தாக்குதலுக்கும் கூடுதல் தண்டனை உண்டு. பாலியல் துன்புறுத்தலை அறிந்து அதைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பவருக்கும் தண்டனை உண்டு.
காவலர்களே பாதுகாவலர்
விசாரணையின்போது காவல் துறையினரைக் குழந்தையின் பாதுகாவலராகக் கருதுகிறது சட்டம். எனவே ஒரு புகார் எழுந்தவுடன் அக்குழந்தைக்கு தேவையான அடைக்கலம், மருத்துவ வசதிகளைச் செய்துதருவது காவல் துறையின் கடமை.
மருத்துவச் சோதனை குழந்தைக்கு அறிமுகமான நபரின் முன்னிலையில் நடைபெற வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரிக்க குழந்தைகளுக்கு ஏதுவான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குழந்தையை அடிக்கடி நீதிமன்றத்துக்கு வரவழைக்காமல் காணொளி மூலம் பேசிக்கொள்ளலாம்.
குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அஜீதா.
“பாக்ஸோ சட்டம் வந்த நான்கு மாதங்கள் வரை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. கொள்கை முடிவுகளை எடுக்கிற அரசும், அதிகாரங்களைப் பிரயோகிக்கிகும் காவல் அதிகாரிகளும் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.
பள்ளியில் கற்றுத் தரலாம்
“10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே குழந்தைகளின் உரிமை, குடும்ப வன்முறை, பெண் சமத்துவம் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் நன்கு தெரிந்தவர்களால்தானே நடக்கிறது. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதே ஒரு சவால் இல்லையா?
பாலியல் குற்றத்துக்கு, பாதிக்கப்படும் பெண் காரணமில்லை என்ற பார்வையே நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க முடியாது. சட்டத்தின் மூலமாகத்தான், சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது” என்கிற அஜிதா, ஊடகங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றார்.
“குற்றவாளிகளை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கும் போதுதான் அச்சம், அவமானம், தவறான கட்டுப்பெட்டித் தனம் விலகும். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிதான் எழுதப்படுகிறது. அதற்கு மாறாக, குற்றம் இழைத்தவருக்குத் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் எழுதப்பட வேண்டும்” என்றும் அஜிதா குறிப்பிடுகிறார்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்திலேயே பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகரித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.
 குழந்தைகள், குற்றங்கள், குழந்தை பாதுகாப்பு, பாலியல் குற்றம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்

                                     TNTET - 2012 Hall Ticket Link

          ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.
Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

                                         Tamil Nadu  Teacher Eligibility Test (TNTET) - 2012


பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841